Thamiraparani pottaltan banned foreign drink companies can save the river - said arnallakkannu idea ...
நெல்லை
மாணவர்களின் புரட்சியால் வெளிநாட்டுக் குளிர்பானத்தை விற்க தடைப் போட்டாச்சு. இப்போ, வெளிநாட்டுக் குளிர்பான நிறுவனங்களுக்கும் தடைப் போட்டால் தான் தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு யோசனை கூறினார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
“தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தமிழக அரசின் குழுவும், மத்திய அரசின் குழுவும் ஆய்வு செய்தன. இதனைத் தொடர்ந்து தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதற்காக போதுமான நிதியை ஒதுக்கவில்லை.
நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கரும்புக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும், வாழைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரமும் வழங்க வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்டு 250 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதில் 17 பேரின் குடும்பங்களுக்கு மட்டும் தலா ரூ.3 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள விவசாய குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு 7 மாதம் சம்பளம் நிலுவையில் உள்ளது. அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் தாமிரபரணி ஆறு வறண்டு காணப்படுகிறது. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது.
ஆனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வறட்சி காலங்களில் தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க அனுமதிக்க கூடாது.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தினமும் 34 இலட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து வருகின்றன. 1,000 லிட்டர் தண்ணீருக்கு 37 பைசா என்ற அளவில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் எடுக்கும் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். அப்படி தடை செய்தால் தான் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க முடியும்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவத்தினர் தாக்குவதும், படகுகளை சேதப்படுத்தி கைது செய்வதும் தொடர் கதையாகி விட்டது. சமீபத்தில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். அதில் ஒரு மீனவர் பலியாகி உள்ளார்.
இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, இலங்கை அரசை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். வேலாயுதம் முன்னிலை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் கசமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் பெரும்படையார், பொன்னுச்சாமி, முத்துசாமி, லட்சுமணன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
