Ten year jail for an old man who killed a driver by a knife
காஞ்சிபுரம்
டிவி சத்தத்தை குறைக்க சொன்ன மினி டெம்போ ஓட்டுநரை கத்தியால் குத்தி கொன்ற முதியவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளிக்கரணை காமாட்சி அம்மன் கோயில் முதல் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (62). இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் தருண் (32). மினி டெம்போ வாகன ஓட்டுநராக இருந்தார்.
கடந்த 27.04.2012-இல் இரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, பக்கத்து வீட்டில் டி.வி. சத்தம் அதிகமாக இருந்ததால் குறைத்து வைக்கும்படி மாரியப்பனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த மாரியப்பன் தன்னிடம் இருந்த கத்தியால் தருணை குத்திக் கொலை செய்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர்.
பின்னர், மாரியப்பனை கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தனர். இவ்வழக்கை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிபதி செல்வகுமார், கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மாரியப்பனுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
