சொதப்பும் தற்காலிக ஓட்டுனர்கள் - மக்கள் உயிரோடு விளையாடும் அரசு
போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுநர்களை வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணிக்கு எடுத்து அவர்களை ஓட்டுநர்களாக நியமிக்க அரசு முடிவு செய்து ஏற்கனவே, போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, திருவட்டாறில் தற்காலிக ஓட்டுநர் ஓட்டிச்சென்ற அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானது. அரசுப் பேருந்து பணிமனையில் இருந்து பேருந்தை எடுத்துச் சென்ற போது மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.