கோவை,
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியன் (73). அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சித்தாபுதூர் பாலாஜி நகரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறிய அளவிலான கிளீனிக் வைத்து நடத்தி வந்தார்.
அவர் கடந்த 18–ஆம் தேதி நடைபயிற்சி மேற்கொண்டு வீடு திரும்பியபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கோவையில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மற்றும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பவர் மருத்துவர் பாலசுப்பிரமணியன். தொடக்க காலத்தில் ரூ.2–க்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தான் ரூ.20 பெற்று சிகிச்சை அளித்து வந்தார். காய்ச்சல், தலைவலி எது வந்தாலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரிடம் செல்வது தான் வழக்கம். நோயாளிகளிடம் அன்பாக பழகி நோயை குணமாக்கும் கைராசிக்கார மருத்துவர்.
இவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் “20 ரூபாய் டாக்டர்” என்று தான் அழைப்பார்கள். குழந்தைகள், வயதானவர்கள், பணம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சை அளித்தார்.
மருத்துவர் பாலசுப்பிரமணியம் இறந்ததும் அவருடைய உடல் கிளீனிக்குக்கு கொண்டுவரப்பட்டது. அவருடைய உடலுக்கு ஏராளமானவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல இடங்களில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஏராளமான பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.
ஒரு சாதாரண மனிதனின் இறப்பிற்கு இத்துனை பேர் கண்ணீர் சிந்தியது, இவரின் நல்ல மனதையும், மக்கள் மீது இவர் காட்டிய அக்கறையையும் காட்டுகிறது. வலைத்தளங்களிலும் இவருக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது.
நெட்டிசன்களும் இவருக்காக கண்ணீர் சிந்த மறக்கவில்லை…
