பழனி,

திண்டுக்கல்லில் ஆசிரியர் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று விட்டு திரும்புவதற்குள் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 60 பவுன் தங்கநகைகள், ரூ.7 இலட்சம் திருடி கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் இடும்பன்மலை அருகேயுள்ள வள்ளியப்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (35). அவருடைய மனைவி ஜெயச்சந்திரா. இவர்களுக்கு அபூர்வாசஹனா (5) என்ற மகள் இருக்கிறார்.

சரவணக்குமார் பழனி - உடுமலை சாலையில் இருக்கும் இலட்சலப்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 23-ஆம் தேதி மனைவி, மகள் மற்றும் தம்பி ராஜேஷ்கண்ணா ஆகியோருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார்.

அந்த சமயத்தில் மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து, அதிலிருந்த தங்கநகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு சரவணக்குமார் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீடு முழுக்க பொருட்கள் சிதறி கிடந்தததும், பீரோவில் இருந்த 60 பவுன் தங்கநகைகள், ரூ.7 இலட்சம் திருட்டு போய் இருப்பதையும் கண்டு கதறினார்.

இதுகுறித்து பழனி நகர காவலாளர்களுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், திண்டுக்கல்லில் இருந்து காவல் துப்பறியும் நாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து இடும்பன் கோவில் வரை ஓடிப்போய் நின்றுவிட்டது.

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் தங்கநகைகள், ரூ.7 இலட்சம் பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.