tea factories strike in ooty

ஜி.எஸ்.டி வரியால் நீலகிரி மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் தேயிலை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்குவது தேயிலை தொழில் ஆகும். குறிப்பாக மாவட்டத்தில் தலைநகரான ஊட்டி உட்பட குன்னூர், கூடலுார், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்படும் பசுந்தேயிலைகள் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, குன்னூர் தேயிலை ஏல மையத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டதை அடுத்து, கடந்த 3 வாரங்களாக தேயிலை தூள் ஏலம் எடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி தேயிலை விவசாயிகள் தெரிவித்தனர். 

மேலும், இதனால் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை தூள்கள் தேக்கமடைந்துள்ளதாகவும், தேயிலை தூள் உற்பத்தி செய்வதில் தொழிற்சாலைகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து, நீலகிரி சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், 102 தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

இந்த திடீர் தேயிலை உற்பத்தி நிறுத்தத்தால், பசுந்தேயிலை எடுக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது .