சுங்கச் சாவடிகளில் வரி உயர்வு; கண்டனம் தெரிவித்து போராடிய 30 பேர் அதிரடி கைது...
காஞ்சிபுரம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்க வரி உயர்த்தியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் சுங்கச் சாவடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் காஞ்சி தீனன் தலைமை தாங்கினார்.
இதில், "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பது,
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்க வரி உயர்த்தியதைக் கண்டிப்பது" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த டி.எஸ்.பி முகிலன் தலைமையிலான காவலாளர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 30 பேரை கைது செய்தனர். அவர்களி அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.