எதற்காக நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் லீவு?! குழப்பத்தில் குமுறும் குடிமகன்கள்...
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரையில் டாஸ்மாக்குக்கு
நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள பசும்பொன்னில் அக்டோபர் 27 முதல் 30 வரை மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த விழாவுக்காக வெளியூரில் இருந்து வரும் பொது மக்களுக்கு வசதியாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் ராமநாதபுரத்தில் இருந்து வாடகை வாகனங்கள் பசும்பொன்னுக்குள் நுழைவதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி நிஷா பானு ஆகியோர் கூறியுள்ளனர்.
இதற்காக, கனரக வாகனங்கள், ஒலிபெருக்கிகள் மற்றும் முறையற்ற வசனங்களுடன் போஸ்டர் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த விழாவையொட்டி நான்கு நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மனமகிழ் மன்றங்கள் , உணவு கூடத்துடன் கூடியபார்கள், படைவீரர் கேண்டீன்கள் ஆகியவற்றிலும் மதுவிற்பனை செய்யக்கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனுக்காக 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட அந்த மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று மாலை 5 மணிக்கு மூடப்பட்டன. இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.