Target of Rs.3600 crore loan to farmers this year collector announcement

2017 - 18 ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று ஆட்சியர் க.நந்தகுமார் அறிவித்துள்ளார்.

வங்கியாளர்களுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை வகித்தார். வங்கிகளின் 2017 - 18 ஆம் நிதியாண்டின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது அவர், “பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டை விட ரூ.500 கோடி கூடுதலாகும்.

இதில், விவசாயத்துக்கு 73 சதவீதமும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு 8 சதவீதமும் இதர முன்னுரிமை கடன்களுக்கு 19 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடன் திட்ட அறிக்கை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வங்கியாளர்கள், அரசுத் துறைகளுடன் இணைந்து கடன் இலக்கை அடைந்து மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி காண வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் நா.முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பா.அருள்தாசன், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பிரதிநிதி தியாகராஜன், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் நவின்குமார் உள்பட பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த மேலாளர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.