சென்னையில் இரவு முழுவதும் மழை உண்டு - தேவையில்லாமல் வெளியே வராதீங்க...!
சென்னையில் இரவு நேரம் முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோர மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 3 நாளுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த 2 நாளாக தென் மேற்கு பருவமழை வங்க கடலில் நீடித்தது.
ஆனால், சுமார் 2,000 சதுர மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் பரவியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் உருவான மேகக் கூட்டங்கள் நிலப்பகுதியை நோக்கி நகரவில்லை.
இதனால் கடல் பகுதியிலேயே அதிகம் மழை பெய்து விட்டது. சென்னையில் நேற்று பகல் நேரத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
இதையடுத்து நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல, மெல்ல வடக்கு கடலோர மாவட்டங்களின் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்தது. இதனால் நேற்று இரவும் இன்றும் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இரவு நேரம் முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.