திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி உள்பட பல்வேறு கூடுதல் தளர்வுகள் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

மேலும், இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15-ந் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. 

இந்த சூழலில், தமிழகத்தில் கொரோனா பரவல் நாளொன்றுக்கு 3,200-க்கும் குறைவாக சென்றுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வு அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. 

இன்று சென்னை, தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு மருத்துவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

 இதில் நர்சரி பள்ளிகளை திறக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மேலும், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது. மேலும் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஆட்கள் கலந்து கொள்ளும் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.