பயணிகளுக்கு காத்திருக்கும் பெரும் இன்னல்கள்! பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல முடியாதா?
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின், 'ஸ்டிரைக்'கை முறியடிக்கும் வகையில், 40 ஆயிரம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை, களத்தில் இறக்கியுள்ளது போக்குவரத்து துறை.
தொழிற்சங்கங்கள் பிடிவாதம் காட்டி வருவதால், ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவதில் இழுபறி நீடிக்கிறது. மாநிலம் முழுவதும், 80 சதவீத பஸ்களின் போக்குவரத்து முடங்கி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்த ஊழியர்கள், 1.43 லட்சம் பேரில், முதல் நாளில், 1.13 லட்சம் பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் சூடுபிடித்துள்ளது. இந்த போராட்டத்தால் தர்க்களிக்க ஓட்டுனர்களை கொண்டு குறைந்த அளவிலான பேருந்துகளை மட்டுமே இயக்க முடிகிறது. இதனால் பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் 22 தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், தொழிலாளர்களின் பிடித்தம் செய்த பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இன்று மாலை சென்னையில் உள்ள அனைத்துப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்துவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வருடம் பொங்கலுக்குச் சொந்த ஊருக்குச் செல்வதற்காக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் வேலை பார்க்கும் பொதுமக்கலுக்காக ஜனவரி 11 முதல் தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் 11 983 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தால் சிறப்புப் பேருந்துகளை இயக்க வாய்ப்பில்லை. கோயம்பேட்டில், இன்று முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் மற்றும் பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களிலும் முன்பதிவு மையங்கள் திறக்கப்படவில்லை. இந்த அறிவிப்பு வெளியூருக்கு செல்லும் பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமா? இயக்கப்படாதா? போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பொங்கலுக்கு எப்படி ஊருக்குச் செல்வது? பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுமோ என தற்போது அச்சத்தில் உள்ளனர்.