tamilnadu local body election will be conducted by the direction of high court

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தல்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி…

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாகவும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக தேர்தல் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம், வர்தா புயல் நிவாரணம் போன்றவற்றிற்காக நிதி கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார்.

இதன் பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்க அளிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பவானி ஆற்றில் கேரள அரசு தடுப்புஅணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்ட தொகையை வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவை தொகையான 17 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்கவும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர் களின் 135 படகுகள் மற்றும் 11 தமிழக மீனவர்களை விடுவிக்கவும் கோரிக்கை வைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமைனை விரைவில் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்,

உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் இபிஎஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜுலை மாதம் நடைபெறவுள்ள . எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.