கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவிய போது நோய்த் தடுப்பு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. பின்னர் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இதை அடுத்து, மேலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே கொரோனாவில் இருந்து மக்களை காக்க தடுப்பூசி செலுத்துவதின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல் தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை இரண்டாம் தவனை தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி, வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெற்று வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம், தற்போது, வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலம் ஏராளமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுகின்றனர். இதற்கிடையே, கொரோனா வைரஸ் தற்போது உருமாறி ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும் டெல்டா வைகை வைரஸை விட அதிக ஆபாத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேர் ஒமைக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

அதன்படி, கொரோனா தடுப்பூசி போடாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் பொருட்களை வழங்க உத்தரவிடுவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், இது போன்று பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை உயரும் என்றும் தெரிவித்தார். மேலும் இது குறித்து சோதனை நடத்தும் போது முதல்முறை சிக்கினால் எச்சரிக்கப்படுவர் என்றும் மீண்டும் தடுப்பூசி போடாதது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
