tamilnadu cinema poet Na.kamarajan expired
பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.காமராசன் மரணம்….இன்று சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள்…
தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் நா.காமராசன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.
1942-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடியை அடுத்த மீனாட்சிபுரத்தில் பிறந்த நா.காமராசனுக்கு மனைவி லோகமணி, மகள் தைப்பாவை, மகன் திலீபன் ஆகியோர் உள்ளனர்.
திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். மூலம் பாடலாசிரியராக நா.காமராசன் அறிமுகமானார். 'பல்லாண்டு வாழ்க', 'நீதிக்குத் தலைவணங்கு', 'இதயக்கனி', 'இன்று போல் என்றும் வாழ்க', 'நவரத்தினம்', 'ஊருக்கு உழைப்பவன்', 'வெள்ளை ரோஜா', 'நல்லவனுக்கு நல்லவன்', 'இதயகோவில்', 'உதயகீதம்', 'நான் பாடும் பாடல்', 'தங்கமகன்', 'அன்புள்ள ரஜினிகாந்த்', 'கை கொடுக்கும் கை', 'காக்கிச்சட்டை', 'காதல் பரிசு', 'முந்தானை முடிச்சு' உள்பட 33 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். பஞ்சவர்ணம் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதியுள்ளார்.
சிறிது காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார். அவரது உடல் சென்னை கோடம்பாக்கம் கங்கா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 9 மணி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சொந்த ஊரான போடி மீனாட்சிபுரத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, பாரதிதாசன் விருது ஆகியவற்றை நா.காமராசன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
