தமிழகத்தின் அனைத்து கீழ் கோர்ட்டிலும் கேமரா – உயர்நீதிமன்ற நீதிபதி தகவல்
தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் விரைவில் கேமரா பொருத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நீதிபதிகள் சங்க அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, விழாவில் அவர் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் நீதி மன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மேலும் நீதிமன்ற வளாகம், நீதிமன்ற அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி அரசின் நிதிக்காக நிலுவையில் உள்ளது. நீதிமன்ற அறைகளுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்துவதால் யாரும் அச்சப்பட தேவை இல்லை. இது வழக்கறிஞர்கள், நீதிபதிகள் , சாட்சிகள் ஆகியோருக்கு உதவியாக தான் இருக்கும்.
தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோர்ட்டு அறையிலும் கூட கண்காணிப்பு கேமரா உள்ளது.
மேலும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளின் முக்கியத்துவத்தை கருதி விரைவாக அந்த வழக்குகளை முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.