தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை அளித்தால், அவர்கள் இந்தி என்ற மொழியில் ஒன்றுபட்டு பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும், அதனால் தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலமாக மாறும் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வேலைக்காக வந்துள்ள வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டால், தமிழ்நாடு விரைவில் இந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் இதுகுறித்து விரிவாகப் பேசியதாவது:

தமிழர்கள் அகதிகளாகும் அபாயம்

"வடமாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி பேர் வேலைக்காகத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் வாக்குரிமை கொடுத்துவிடுவீர்கள். அப்படி வாக்குரிமை கொடுத்துவிட்டால், தமிழ்நாடு இன்னொரு இந்தி பேசும் மாநிலமாக மாறும்.

“இங்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் இருந்தாலும், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தி என்கிற ஒரே மொழியில் ஒற்றுமையாக நின்றுவிடுவார்கள். அவர்கள் அனைவரும் பாஜக வாக்காளர்கள். வடமாநிலத்தவர்களைத் தவிர்க்க முடியாத தொழிலாளியாக இங்கு அமர்த்தி, நம்மை இங்கிருந்து விரட்டுவார்கள். அவர்களிடம் என்னுடைய அரசியலும், அதிகாரமும் போய்விட்டது என்றால், நான் இந்த நிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய அகதியாக மாற வேண்டிய சூழல் ஏற்படும். அதற்கு முன்பே நாம் எச்சரித்துக் கொள்ள வேண்டும்."

வாக்குரிமை குறித்து வலியுறுத்தல்

"வா, இரு, வேலை செய்... ஆனால், வாக்கைச் சொந்த ஊரில் போய் செலுத்திவிடு. சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்குக் கொடுத்துவிட்டால், நாம் தெருவில்தான் நிற்க வேண்டும்," என்றும் சீமான் தனது கவலையைத் தெரிவித்தார்.