tamil nadu welfare ministry send notice to 20 000 persons



தமிழகம் முழுவதும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தாத 20 ஆயிரம் குடும்பங்களுக்கும், சென்னையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்படும் 2 ஆயிரம் கடைகளுக்கு தமிழக சுகாதார துறை  சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு மரணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும்  பலர் உயிரிழந்து வருகின்றனர். டெங்கு உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் புதுப்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பல இடங்களில் உள்ள 2 ஆயிரம் கடைகளுக்கு சுகாதாரத்துறை அனுப்பிய நோட்டீசில், நீர் தேங்குவதற்கு ஏதுவான டயர் உள்ளிட்ட கழிவு பொருட்களை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பழைய பொருட்களை அகற்றாவிட்டால், 6 மாத சிறைத்தண்டனையும், 1 லட்சம் ரூபாய்  அபராதம் விதிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இதே போன்று தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தி செய்யும் வகையில்  குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றாமல் இருந்தது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சுகாதாரத்துறை சார்பில், 20 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.