தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்.. எழுந்து நிற்க வேண்டுமா..? இல்லையா..? எழுந்த சர்ச்சை.. பறந்த ஆர்ட்டர்..
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காததால் எழுந்த சர்ச்சையடுத்து, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும் என்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
73 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொணடாடப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் சார்பிலும், அனைத்து அலுவலகம், அனைத்து பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்து பக்கங்களிலும் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும் இதற்கு மரியாதை செய்யும் வகையில் அனைவரும் எழுந்து நிற்பது வழக்கம்.
அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள்,கர்ப்பிணிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனும் அரசாணையை கடந்த 17.12.2021 அன்று வெளியிட்டார்.
குடியரசு தினத்தையொட்டி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் அதன் மண்டல இயக்குனர் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.இதுகுறித்து அவர்களிடம் ஒரு தரப்பினர் விளக்கம் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வங்கி அதிகாரி வாதிட்டார். இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டவே, வங்கியின் உயர் அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மரியாதை செலுத்துவது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்து வாக்குவாதத்தை முடித்து வைத்தார்.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காத செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து இன்றைய தினம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.மேலும் இசைத்தட்டுகளை கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தை வாய்ப்பாட்டாக பாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.