தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 29-இல், ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக பேரமைப்பின் வேலூர் மண்டலத் தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
“தனி நபரின் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ. 6 இலட்சமாக உயர்த்த வேண்டும். வங்கிகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசத்தை 31 மார்ச் 2017 வேரை நீட்டிக்க வேண்டும். மின்னணு வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பதிவு பெற்ற வணிக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு "ஸ்வைப்' இயந்திரத்தை வங்கிகள் உடனடியாக வழங்க வேண்டும். அதற்கான சேவை கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.