ஆவின் பொருட்கள் விலை உயர்வு: தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!
ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது

ஆவின் விற்கப்படும் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த பொருட்கள் மீதான விலை ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பன்னீர் ஒரு கிலோ விலை ரூ.450இல் இருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பன்னீர் அரை கிலோ விலை ரூ.250இல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பன்னீர் 200 கிராம் விலை ரூ.100இல் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், பாதாம் மிக்ஸ் 200 கிராம் விலை ரூ.ரூ.100இல் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் கடந்த 2022ஆம் ஆண்டில் மூன்று முறை பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியது. குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி ஆவின் பாதம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 உயர்த்தப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அதன் விற்பனை விலை மீண்டும் ஒரு கிலோவுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு அதன் விலை உயர்வு இன்று (25.07.2023) முதல் அமுலுக்கு வந்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த இரண்டரை ஆண்டுகளில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு வெறும் ரூ.3 மட்டும் உயர்த்தப்பட்ட நிலையில் பால் பொருட்களின் விற்பனை விலை மட்டும் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் விரோத செயலாகும்.
எனவே மக்கள் நலன் கருதி தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் பாதாம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும். பால் கொள்முதல் உயர்வுக்கேற்ற வகையில் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.