கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களை சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
அதன்படி, விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதிமுக மாநாட்டுக்கு சென்று வீடு திரும்பும் போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு!
இதையடுத்து, மேற்கண்டவாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகைபுரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய உதவும் வகையில் கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி (நேற்று) வரை சிறப்பு முகாம்கல் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவும் செய்யும் பணி நேற்றுடன் நிறைவடைந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
