கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த ஆளுநர் பன்வாரிலால்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். கடந்த ஒருவாரமாக கருணாநிதிக்கு வீட்டில் இருந்த படியே மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வந்தது.
நேற்று நள்ளிரவு திடீரென கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அவர் உடனே ஆழ்வார்பேட்டை உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட கருணாநிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடனடி சிகிச்சையின் காரணமாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது. தொடர்ந்து அவரை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் விசாரித்தார். மருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், மு.க.அழகிரி ஆகியோர் உள்ளனர்.