தமிழக அரசு திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 8% லிருந்து 4% ஆக குறைத்துள்ளது. இது திரையரங்குகளுக்கு மக்களை மீண்டும் ஈர்க்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

திரைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்கத்திற்கு தேடி வந்த காலம் மலையேறிவிட்டது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. டிக்கெட் கட்டணம் ஒருவருக்கு 200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. 4 பேர் கொண்ட குடும்பத்தினர் திரையரங்கிற்கு செல்ல வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணம் ஆயிரம் ரூபாயும், ஸ்நாக்ஸ் விலை 500 ரூபாயும், பார்க்கிங் கட்டணம் 100 ரூபாய் வரையும் வசூலிக்கப்படுகிறது. ஒரு திரைப்படத்தை பார்க்க 2000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை நீடிக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் ஓடிடியில் படங்களை பார்க்க தொடங்கிவிட்டனர்.

இதனால் திரையரங்கில் மக்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இந்த நிலையில் திரைத்துறையினரின் கோரிக்கையையேற்ற தமிழக அரசு தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%ல் இருந்து 4% ஆக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர் நன்றி தெரிவித்து வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%ல் இருந்து 4% ஆக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சியான; வரவேற்கத்தக்க செய்தி!! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணைமுதல்வர் உதய நிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, இந்த கேளிக்கை வரியை குறைத்தது உண்மையிலேயே இது திரைத்துறையின் வளர்ச்சிக்கு பயனாற்றக்கூடியதாகும். ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரிகளால் சில ஆண்டுகளாக தமிழ்த் திரைத்துறை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், தமிழ்த்திரையுலகம் நன்மைபெறும் நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டது இப்போது அந்த கோரிக்கை வெற்றிபெற்றிருக்கிறது.

தமிழ்த் திரைத்துறை சமீபகாலமாக எதிர்கொண்டு வரும் மிக கடினமான சூழலில், இந்த வரிக்குறைப்பு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமை குறைப்பாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டுகளிலேயே அமர்ந்து திரைப்படம் பார்ப்பவர்களுக்கும், அலைபேசி வாயிலாக செயலிகளில் திரைப்படங்களை காணப் பழகி வரும் ரசிகர்களையும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மீண்டும் அழைத்து வரும் ஒரு நல்ல மாற்றமாகவும் இந்த கேளிக்கை வரி குறைப்பு அமையும் என்று நம்புகிறேன் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.