தமிழகத்தில் 11 நகராட்சிகள் சிறப்பு, தேர்வு மற்றும் முதல் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. வருவாய் அடிப்படையில் இந்த தரம் உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்ளிட்ட நகராட்சிகள் பயனடைந்துள்ளன.
அமைச்சர் கே.என்.நேரு
தமிழக சட்டப்பேரவையில் திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை மற்றும் பழனி ஆகியவை சிறப்பு நிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம் ஆகியவை தேர்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சிகளாக தரம் உயர்த்துவது எப்படி?
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில்: சிறப்புநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த அதன் ஆண்டு வருவாய் ரூ.15 கோடிக்கு மேலாகவும், தேர்வுநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.15 கோடி வரையிலும், முதல்நிலை நகராட்சியாக நிலை உயர்த்த ரூ.9 கோடி வரையிலும், இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த ரூ.6 கோடிக்கு மிகாமலும் வருவாய் அளவு இருக்க வேண்டும்.
இந்நிலையில், திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேசுவரம், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளைத் தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது.
11 நகராட்சிகளின் தரம் உயர்வு
சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மாநில அரசு நிர்ணயித்துள்ள வருவாய் அளவுக்கு உட்பட்டு அந்த நகராட்சிகள் இருப்பதால் அவை தரம் உயர்த்தப்படுகின்றன. திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய மூன்று தேர்வு நிலை நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேசுவரம் ஆகிய முதல்நிலை நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள் முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
