5 நாட்கள் தொடர் விடுமுறை..! இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கம்- எந்த எந்த இடங்களுக்கு தெரியுமா.?
Special Tamilnadu Government Buses ahead of Holiday : வார இறுதி நாட்கள், மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை- சிறப்பு பேருந்து
இந்த வார வியாழக்கிழமை (28/09/2023) மிலாடி நபி, சனிக்கிழமை (29/09/2023) ஞாயிற்றுக் கிழமை (01/10/2023) மற்றும் 02/10/2023, அன்று காந்திஜெயந்தி தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் ஐந்து நாட்கள் விடுப்பு கிடைப்பதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்தது. இதனையடுத்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில், தொடர் விடுமுறை தினத்தையொட்டி வெளி ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்த பயணிகள்
இதன்படி முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும் மற்றும் பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும் பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் இன்றைய தேதியில் வெள்ளி. சனி. ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மேலும், இந்நாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 27/09/2023 அன்று 16,980 பயணிகளும் 29/09/2023 அன்று 14,473 பயணிகளும் மற்றும் 03/10/2023 அன்று 7,919 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர் மற்றும் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 27/09/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளும் மற்றும் 29/09/2023 அன்று 450 பேருந்துகளும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை. திருநெல்வேலி, திருச்சி. சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை திரும்ப சிறப்பு பேருந்து
இதுமட்டுமின்றி, 02/10/2023 அன்று திங்கட்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட் கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 17,242 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc official app மூலமும் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.