தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு கடந்த 7.5.2021 அன்று நியமிக்கப்பட்டார். தற்போது அவர் 60 வயதை நிறைவு செய்யும் நிலையில் இன்றைய தினம் பணி ஓய்வு பெறுகிறார். எனவே தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமனம் செய்து அரசாணை ஒன்றை இறையன்பு நேற்று பிறப்பித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இறையன்பு இன்று ஓய்வுபெறுவதை முன்னிட்டு அவரது எழுத்து, பேச்சு, செயலால் ஊக்கம் பெற்ற பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தலைமை செயலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். புதிதாக பொறுப்பேற்ற தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இறையன்பை வழி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இறையன்புவுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், அன்பும் பண்பும் நிறைந்த சகோதரர் திரு. வெ.இறையன்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பணி ஓய்வு பெற்றுச் செல்லும் இன்றைய தினம் என்பது தங்களது நிர்வாகப் பணிகளுக்கான ஓய்வே தவிர, சமூக, இலக்கியப் பணிகளுக்கான ஓய்வல்ல என்பதைத் தாங்களும் அறிவீர்கள். 

அந்த வகையில் எதிர்வரும் காலத்திலும் தங்களது சமூக - இலக்கிய - ஆய்வுப் பணிகளைத் தொய்வின்றித் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மிக நெருக்கடியான கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்தில் கழக ஆட்சி அமைந்தபோது, நிர்வாகத் துறையில் தலைமைப் பொறுப்பான தலைமைச் செயலாளர் பொறுப்பைத் தாங்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டு வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டீர்கள்.

மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு

கடந்த இரண்டு ஆண்டு காலமாக அரசின் அனைத்து முன்னெடுப்புகளையும் முடுக்கிவிட்டு, தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு தங்களது சிந்தனை, செயல் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினீர்கள். குறிப்பாக, சென்னை வெள்ள நிவாரணப் பணிகளின்போதும், உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் வண்ணம் நடத்தி முடித்திடவும் தங்களின் பங்களிப்பு மகத்தானது. மேலும், விடுமுறை தினங்களிலும் தாங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டு, அலுவலர்களை வழிநடத்திய விதம் போற்றுதற்குரியது. 

Scroll to load tweet…

இன்றைக்கு இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்க, தங்களது வழிகாட்டுதல்களும், நிர்வாகத் திறமையும், துறை ஒருங்கிணைப்பும் மிகமிக முக்கியமான அடித்தளமாக அமைந்திருந்தது. தங்களது இரண்டு ஆண்டுப் பணி என்பது, தமிழ்நாட்டுக்கு காலம் காலமாக நினைவுகூரக் கூடிய பணியாக அமைந்திருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசும், குறிப்பாக தனிப்பட்ட முறையில் நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

இனிவரும் எதிர்கால இளைய தலைமுறை அலுவலர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்துள்ளீர்கள். பல்துறை ஆற்றல் கொண்ட தாங்கள், தொடர்ந்து இந்த மாநிலத்துக்கும் மனித குல மேம்பாட்டுக்கும் அருந்தொண்டாற்றி வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அன்புமிகு நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருடன் யாரா இருக்கும்.? 50 லட்சத்துக்கும் அதிகமான கொள்ளை பொருட்களை கண்டுபிடித்த ஆப்பிள் ஏர்டேக்! அடேங்கப்பா