இலங்கை கடற்படையின் அட்டூழியம் தாங்க முடியலயே... தமிழக மீன்வர்கள் 10 பேர் கைது..!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் பிறகு விடுவிப்பதும் வழக்கமாக உள்ளது. மீனவர்களை விடுவித்தாலும் பல நேரங்களில் படகுகளை விடுவிப்பதில்லை.
இதுதொடர்பாக இருநாட்டு மீனவர்கள் மட்டத்திலும் இருதரப்பு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டபோதிலும் இலங்கைக் கடற்படையின் அத்துமீறல் தொடர்ந்து நடந்துவருகிறது.
இந்நிலையில், இன்று காலை மீண்டும் தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்குவந்த இலங்கை கடற்படை அவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 10 மீனவர்களையும் அவர்களது படகையும் சிறைபிடித்தது. கைது செய்த மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது.