நாமக்கல்,

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

திருச்செங்கோடு நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள், கையால் மனித கழிவுகளை அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை சார்பில் துப்புரவு பணியாளர்கள் 30–க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

“திருச்செங்கோடு நகராட்சியில் சுமார் 120 பேர் அரசு துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றோம். நகராட்சியில் எங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும், சலுகைகளும் முறையாக வழங்கப்படவில்லை.

துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் தரமானதாகவும், பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் வழங்க வேண்டும்.

நகராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு கையால் மனித கழிவுகளை அள்ளுவதை தடை செய்ய வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை முறையான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள் இறந்தாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ அவர்களுடைய பணபலன்களை 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும்.

நகராட்சி துப்புரவு பணி 11 வார்டுகளில் தனியார் வசம் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. அந்த வார்டுகளில் நகராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு பணி செய்வதையும், நகராட்சி வாகனங்களை பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும். மாத சம்பளத்தை 1–ஆம் தேதி முதல் 5–ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு நகரின் மையப்பகுதியில் அரசு குடியிருப்பு கட்டித் தர வேண்டும்.

திருச்செங்கோடு நகராட்சியில் பல ஆண்டுகளாக ஆணையாளர் நியமனம் செய்யவில்லை. உடனடியாக ஆணையாளரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளையும் நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.