Take action to free the fishermen the boats will not fellowship festival Precisely fishermen

இராமேசுவரம்

இதுவரை சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 72 மீனவர்களையும், 129 படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல படகுகள் வழங்கமாட்டோம் என்று என்று மீனவர்கள் சங்க கூட்டம் தெரிவித்துள்ளது.

இராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் என்.ஜே.போஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சேசுராஜா, அல்போன்ஸ், எமரிட், மகத்துவம் உள்பட மீனவ சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், “இதுவரை சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 72 மீனவர்களையும், 129 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களை விடுவிக்கும் வரை நாளை (7–ஆம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது,

வருகிற 11–ஆம் தேதி மீனவ சங்கத்தினர், மகளிர் சங்கத்தினர் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்களை திரட்டி பாம்பனில் இரயில் மறியல் போராட்டம் நடத்துவது,

மேலும் வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் அங்குச் செல்ல தமிழகத்தை சேர்ந்த 4000–க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

கச்சத்தீவு விழாவை புறக்கணித்து, கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல படகுகள் வழங்குவதில்லை என்றும் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்” என்று அறிவித்தனர்.