சுவாதி கொலை வழக்கு படம் பெயர் மாற்றம் – கைதுக்கு பயந்து இயக்குனர் அறிவிப்பு…
சுவாதி கொலை வழக்கு படத்தை தடை செய்யக்கோரி சுவாதியின் தந்தை அளித்த புகாரையடுத்து அப்படத்தின் பெயர் நுங்கம்பாக்கம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், ராம்குமார் சிறையில் இருந்த மின்வயரை கடித்து, தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயசுபஸ்ரீ புரடெக்ஷன் சார்பில் எஸ்.கே.சுப்பையா, ஸ்வாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்கிறார். விஜயகாந்த் நடித்த உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.பி.ரமேஷ்செல்வன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு‘ஸ்வாதி கொலை வழக்கு’ என பெயரிடப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து இந்த சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரியும் இயக்குனர் ரமேஷ் செல்வனை கைது செய்யக்கோரியும் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் டி.ஜி.பி. அலுவலகத்தில் இரண்டுமுறை புகார் அளித்திருந்தார்.
இதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனுவை தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இன்று ரமேஷ் செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சுவாதி கொலை வழக்கு படத்தின் பெயர் நுங்கம்பாக்கம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், உண்மை கலந்த கற்பனை படமே நுங்கம்பாக்கம் என தெரிவித்தார்.