Suspend on retirement day department of mine Wealth Assistant Director
தேனி
தேனியில், ஓய்வு பெறும் நாளில் கனிமவளத் துறை உதவி இயக்குனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது எழுந்துள்ள புகாரின்பேரில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநராக பணியாற்றியவர் சாம்பசிவம் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற இருந்தார்.
இவரோடு சேர்த்து மாவட்டத்தில் இன்னும் சில அதிகாரிகளும் பணி ஓய்வு பெற இருந்தனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவில் பணி மூப்பு நிறைவு பெற்றதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
ஆனால், கனிமவளத்துறை உதவி இயக்குநர் சாம்பசிவத்துக்கு மட்டும் பணி மூப்பு நிறைவு பெற்றதற்கான உத்தரவு வழங்கப்படாமல் இருந்தது. இதனால், அவர் ஓய்வு பெறவில்லை.
இந்த நிலையில் ஓய்வு பெறும் நாளில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு சென்னை கனிமவளத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து சாம்பசிவத்துக்கு நேரடியாக வழங்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் சாம்பசிவத்தின் மீது விவசாயிகள் தரப்பிலும், சில அமைப்புகள் தரப்பிலும் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இதில, இலஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுக்கப்பட்ட ஒரு புகாரின்பேரில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணை நிலுவையில் இருப்பதாக கூறி அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் அரசு அதிகாரிகள் பெரும் பரபரப்பில் உள்ளனர்.
