Surgery to reduce body weight woman kills wrong treatment is the reason
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் எடை குறைப்பு மருத்துவமனையில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த 45 வயதுடைய வளர்மதி என்ற பெண் 150 கிலோ எடையுடன் சிரமப்பட்டு வந்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் அவரது 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் அதிக உடல் எடையுடன் இருந்துள்ளனர்.
எனவே இதுதொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். இவர்களை சோதித்த மருத்துவர்கள், இவ்வளவு உடல் எடையுடன் இருந்தால் ரத்தத்தை உடலுறுப்புகளுக்கு அனுப்பும் இதயம் செயலிழந்துவிடும் எனவும் இதனால் உயிருக்கு ஆபத்து நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அச்சமடைந்த அந்த குடும்பம், அதற்கான தீர்வைக் கேட்டுள்ளது. உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிய மருத்துவர்கள், குடும்பத்துடன் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்த வளர்மதி, கடந்த 23-ம் தேதி அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வளர்மதி மற்றும் அவரது மகள்கள், மகன் ஆகியோருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வளர்மதியின் உடல் எடை மிகவும் அதிகமாக இருந்ததால் 9 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு 9-வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை வளர்மதி உயிரிழந்தார்.
தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாகவே தனது மனைவி இறந்துவிட்டதாக வளர்மதியின் கணவர் கீழ்ப்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
