“அதிகாரிகள் என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பரவா இல்லை…” - ஜல்லிக்கட்டுக்கு திருச்சி போலீஸ்காரர் ஆதரவு
ஜல்லிக்கட்டுக்கு போராடும் இளைஞர்கள், விவசாயத்திற்கும் போராட வேண்டும் என திருச்சியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஊர்காவல் படையை சேர்ந்த போலீஸ் அதிகாரி பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு போலீஸ்காரர் ஒருவர் ஆதரவு தெரிவித்தார். சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் ஆயுதப்படை காவலர் மதியழகன், போக்குவரத்து தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இருவரும் சீருடையில் 'மைக்' பிடித்து, உணர்ச்சி பெருக்குடன் பேசியதால், அவர்களை இளைஞர்கள் கட்டித் தழுவி நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், திருச்சி எம்.ஜி.ஆர். சிலை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், பாதுகாப்புக்கு வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த பெல்சன் என்பவர் மாணவர்களின் போராட்டத்துக்கு தெரிவித்து பேசினார்.
அப்போது, “நானும் கிராமத்தை சேர்ந்தவன் தான், ஜல்லிக்கட்டு எனக்கு பிடிக்கும். ஜல்லிக்கட்டு நடக்காதது வேதனையளிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு போலீஸ் எதிரி கிடையாது. அதனால், போலீசாரை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் போலீசார் உதவி செய்கிறார்கள். போலீசார் உங்கள் நண்பர். ஜல்லிக்கட்டுக்காக போராடும் நீங்கள் விவசாயத்துக்காகவும் போராட வேண்டும்.
ஜல்லிக்கட்டு குழந்தை பருவம் முதல் பார்த்து வருகிறோம். நமது தாய் தந்தை சொல்லி கொடுத்தது. ஜல்லிக்கட்டை பற்றி பீட்டா அமைப்புக்கு தெரியாது. இதை தடை செய்ய அவர்கள் யார்? இது உணர்வுப்பூர்வமான போராட்டம். இந்த போராட்டத்தை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
என் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். உங்கள் உணர்வுப்பூர்வமான போராட்டத்துக்கு எனது வாழ்த்துகள். இளைஞர்கள் அமைதியாக போராடுவது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.
அவரது பேச்சை கேட்டதும், அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கரகோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் முத்தம் கொடுத்து, தோளில் தூக்கி கரகாட்டம் ஆடினர்.
கோவையில் ரேக்ளா பந்தயம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கினார்
பல்வேறு போராட்டங்களுக்கு பின், கோவையில் தற்போது ரேக்ளா பந்தயம் தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.