கோவை தொழிலதிபரிடம் பல லட்சம் மோசடி - சுகேஷ் ஜாமீன் மனு நாளை விசாரணை
கோவை தொழிலதிபரிடம் பல லட்சம் மோசடி செய்த வழக்கில், சுகேஷின் ஜாமீன் மனுவை நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. இரு அணிகளும் தங்களுக்கான சின்னமான இரட்டை இலையே தரக்கோரி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது. இதற்கான விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் டிடிவி.தினகரன், இடை தரகர் சுகேஷ் சந்திரா மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, 2 பேரையும் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.
இந்த நேரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து சலுகைகளை பெற்று தருவதாக கூறி கோவை தொழிலதிபர் ஒருவரிடம், சுகேஷ் சந்திரா பண மோசடி செய்ததாக கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இயடுத்து நீதிமன்ற திகார் சிறையில் இருந்த சுகேஷ், கோவைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது, அவர் 2 முறை ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகேஷ் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் அறிவித்தது.