sudhakaran appeared in egmore court

அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக சுதாகரனை, பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் இருந்து இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்குவதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 15ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக சுதாகரனை ஆஜர்படுத்த வேண்டும் என்று கடந்த மாதம் 10ம் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.இதனால்,, சுதாகரனை சென்னைக்கு அழைத்து வருவதாக பரபரப்பு கிளம்பியது.

சுதாகரனை சாலை மார்க்கமாக அழைத்து வருவதில் சிக்கல் உள்ளதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி சத்யநாராயணராவ் கூறினார். மேலும், அந்த நேரத்தில், கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதால் சுதாகரனை அழைத்து வருவது பாதுகாப்பானதாக இருக்காது எனவும் அதிகாரிகள் கூறினர்.

மேலும் தமிழக போலீசாரும் சுதாகரனுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்ய முடியாது என்று கைவிட்டுவிட்டதால் சிறைத்துறை திடீரென முடிவை மாற்றியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சுதாகரனை சென்னை அழைத்து வர முடியாத காரணத்தை கூறி சுதாகரன் சார்பில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால், நீதிமன்றம் அதற்கு அனுமதிக்கவில்லை. ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு காரணத்தால், சசிகலாவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் சுதாகரனும் கேட்பது சரியானது அல்ல என கண்டிப்புடன் கூறி, ஜூன் 20ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தனர். அப்போது, சுதாகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரனை வேன் மூலம், கர்நாடக போலீசார் சென்னை அழைத்து வந்தனர். அவரை, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.