விழுப்புரத்தில் திடீர் மழை; மின்னல் தாக்கி கொட்டகைகள் எரிந்ததில் இரண்டு பசுமாடுகள் கருகி சாவு...
விழுப்புரம்
விழுப்புரத்தில் பெய்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெப்பம் தணிந்து, பூமி குளிர்ச்சி அடைந்தது. மழையின்போது மின்னல் தாக்கியதில் 2 பசு மாடுகள் பரிதாபமாக கருகி உயிரிழந்தன.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை தூர தொடங்கியது.
பின்னர் நேரம் செல்ல செல்ல இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வெப்பம் தணிந்து, பூமி குளிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் நயினார்பாளையம் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி குமரப்பிள்ளை (60) என்பவர் தனக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை கொட்டகையில் கட்டியிருந்தார்.
நேற்று மதியம் மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் அந்த மாட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதில் கொட்டகையில் கட்டியிருந்த இராண்டு பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே கருகி பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தானியங்கள், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்தன. இதனால் குமரப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.