Subramanian Swamy advised BJPs for dont invite rajinikanth
நடிகர்கள் பின்னாடி போக வேண்டாம், சசிகலா தலைமையிலான அ.தி.மு.கவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைக்க வேண்டும் என பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கட்சித் தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இருந்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபின், ஒ.பன்னீர் செல்வத்தை வறுத்து எடுக்கும் சுப்பிரமணியசாமி, சசிகலா தரப்பையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை புகழந்தும், ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில், நடிகர் ரஜினி காந்த் தனது ரசிகர்களை 5 நாட்கள் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, ‘தமிழகத்தில் அரசியல் ‘சிஸ்டம்’ மோசமாக இருக்கிறது. மாற்றத்துக்கு தயாராக இருக்க வேண்டும் எதிர்ப்புதான் வளர்க்கும். போருக்கு தயாராக இருங்கள்’ என்று கூறி தனது அரசியல் பிரவேசத்தை மறைமுகமாகத் தெரிவித்தார்.
நடிகர் ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பின், பல அரசியல் கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன, சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உருவபொம்மையையும் எரித்தன. குறிப்பாக பா.ஜனதா கட்சி ரஜினி அரசியல் பிரவேசத்தை வரவேற்று,வௌிப்படையாக தங்கள் கட்சிக்குள் இணைய அழைத்து விடுத்தது. அந்த கட்சியின் தேசியத் தலைவர அமித் ஷா, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி ஆகியோர் ரஜினிக்கு வரவேற்புத் தெரிவித்தனர்.
ஆனால், அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ரஜினியின்அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘ ரஜினிக்கு அரசியல் ஒத்துவராது, அவர் சினிமாவிலேயே தொடர வேண்டும். அவருக்கு அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏதும் தெரியாது. காமராசர் போட்டுவைத்த அடித்தளத்தை சினிமா நடிகர்கள் வீணடித்துவிட்டனர். நடிகர்கள் அரசியலுக்குள் வரக்கூடாது’ என்றார்.
இந்நிலையில் டுவிட்டரில் சுப்பிரமணிய சாமி இன்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ இப்போது கூட நான் சொல்கிறேன், சினிமா நடிகர்கள் பின்னாடி ஓடுவதை பா.ஜனதா கட்சியினர் நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாகசசிகலா ஆதரவு அ.தி.மு.க. அணியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அழைத்து இணைக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
