Students swallowed poison in the water Six people were admitted to the hospital
ஓமலூர்
சேலத்தில், அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் குடிக்கும் குடத்துத் தண்ணீரில் விஷம் கலந்திருந்ததால், அதனை குடித்த ஆறு மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே சங்கீதப்பட்டியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 167 பேர் படிக்கின்றனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்தனர். அங்குள்ள ஒரு வகுப்பறையில் இருந்த தண்ணீர் குடத்தில், 6–ஆம் வகுப்பு மாணவனான அதே பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (11) தண்ணீர் குடித்துள்ளான்.
இதேபோல் அதே வகுப்பில் படித்து வரும் மாணவ, மாணவிகள் அபிநயா, கவிபாரதி, லோகேஸ்குமார், பிரகாஷ், விஜயராஜ் ஆகிய ஐவரும் அந்த குடத்தில் தண்ணீர் குடித்துள்ளனர்.
பின்னர், குடத்து தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து, பள்ளி தலைமை ஆசிரியை கலைசெல்வி வகுப்பறைக்கு வந்து பார்த்தார். அப்போது தண்ணீரில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த குடத்தில் இருந்த தண்ணீரை குடித்த ஆறு மாணவ, மாணவிகளும் உடனடியாக கருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சூரமங்கலம் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், “6–ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பெற்றோர்கள் சண்டையிட்டு கொண்டதால் மனவேதனை அடைந்து தென்னை மரத்திற்கு வைக்கும் விஷ மருந்தை சட்டை பாக்கெட்டில் எடுத்து வந்துள்ளான். அவன் குடத்தில் இருந்த தண்ணீரை குடிக்க குனிந்த போது, சட்டையில் வைத்திருந்த விஷ மருந்து தண்ணீரில் தவறி விழுந்ததை அவன் கவனிக்காமல் இருந்தது” அந்த விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிருத்திவிராஜ், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராஜேஷ்கண்ணா, கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர் வாசுகி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
