ஒழுங்காக பள்ளிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்; பள்ளிக்கு பூட்டுப்போட்ட பெற்றோர்கள்...
விருதுநகர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒழுங்காக பள்ளிக்கு வராத ஆசிரியையும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியையும் கண்டித்து பெற்றோர்ர்கள் பள்ளிக்கு பூட்டுப்போட்டு மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே அத்திகுளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 35 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் நான்கு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இங்கு ஒரு ஆசிரியர் பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு தொடர்ந்து வராமல், கல்விச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கல்வித்துறை அலுவலர்களுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து பள்ளியின் கல்வித்தரம் மோசமடைந்து உள்ளதாகவும் தலைமை ஆசிரியையிடமும் பெற்றோர்கள் முறையிட்டுள்ளார்கள். அவரும் இதனை கண்டுகொள்ளவில்லை.
தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் மற்றொரு ஆசிரியை ஆகியோர் பள்ளியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கின்றனர் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து புகார் கூறிவந்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர்களை கண்டித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் நேற்று பள்ளியை இழுத்து மூடி பூட்டுப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவில்லிபுத்தூர் தாசில்தார் ராமநாதன், துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா, ஆய்வாளர் ஜஸ்டின் பிரபாகரன், கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் அங்கு வந்து திரண்டு இருந்தோரிடம் சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆசிரியர்கள் மீது சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டது. 450 பிள்ளைகள் படித்த பள்ளிக்கூடம் 35 பேரில் வந்து நிற்கிறது. நாள்தோறும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் 10 மணிக்கு மேல் வருகிறார்கள். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது 3-ஆம் பருவத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் ஆங்கில பாடத்தில் முதல் பாடமே நடத்தி முடிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமை ஆசிரியை உள்பட மூவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிட மாறுதல் செய்ய ஆட்சியருக்கு அறிக்கை அனுப்புவதாக தாசில்தார் ராமநாதன் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் உறுதியளித்தனர்.
அதன்பின்னர், பள்ளி வாசலில் அமர்ந்திருந்த மாணவ - மாணவிகள் பிற்பகலில் பள்ளிக்குச் சென்றனர்.