பொங்கல் கொண்டாட அனுமதிக்காததால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்; இறுதியில் மாணவர்களுக்கே வெற்றி...
அரியலூர்
பொங்கல் விழாவை கொண்டாட அனுமதிக்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கி மாணவர்களை சமாதானப்படுத்தியது.
அரியலூரில் மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வேட்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை அணிந்தும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
இந்தாண்டு ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். அப்போது பொங்கல் பண்டிகை கொண்டாட கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் இன்று முதல் 16-ஆம் தேதி வரை கல்லூரி விடுமுறை என்று கல்லூரி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொங்கல் பண்டிகை கொண்டாட அனுமதிக்க கோரி முழக்கமிட்டனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையில், நாளை (அதாவது இன்று) கல்லூரி வழக்கம்போல செயல்படும் என்றும், பொங்கல் பண்டிகையை மாணவர்கள் கல்லூரியில் கொண்டாடலாம் எனவும் தெரிவித்தனர்.
அதனையேற்று மாணவர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.