கிரிக்கெட் பேட் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற மாணவன் மரணம்! ஆசிரியர் கைது!
கிரிக்கெட் விளையாட்டின்போது கையிலிருந்த பேட் நழுவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாணவன் மீது விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் விக்னேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான்.
மாணவனின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து ஆசிரியர் குப்புசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே சித்தம்பூண்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஸ்வேஸ்வரன்.
விஸ்வேஸ்வரன், வெட்டம்பாளையத்தல் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி 7 ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி மைதானத்தில் ஆசிரியர் குப்புசாமி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
விளையாட்டின்போது ஆசிரியர் குப்புசாமி பந்தை அடிக்க முயன்றார். அப்போது பேட் நழுவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாணவன் விஸ்வேஸ்வரன் மீது விழுந்தது.
இதில் விஸ்வேஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விக்னேஸ்வரன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
மயங்கிய நிலையில் இருந்த விக்னேஷ்வரன் பின்னர் கோமா நிலைக்கு சென்றார்.
இதையடுத்து விக்னேஸ்வரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனாலும் இன்று அதிகாலை விக்னேஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
மாணவன் விக்னேஸ்வரனின் உயிரிழப்புக்கு ஆசிரியர் குப்புசாமிதான் காரணம் என்றும், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி விக்னேஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விக்னேஸ்வரனின் உடலை வாங்கவும் அவர்கள் மறுத்து வந்தனர்.
ஆசிரியர் குப்புசாமி மீது மாணவனின் பெற்றோர் புகார் செய்தனர். மேலும், ஆசிரியர் குப்புசாமி மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை என்றும் அவர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், மாணவன் விக்னேஷ்வரன் மரணத்தை அடித்து கொலை வழக்காக பதிவு செய்து, ஆசிரியர் குப்புசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.