பெண் குரலில் பேசி போலீஸ்காரரை மயக்கிய கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; இருவர் கைது; போலீஸ்காரர் எஸ்கேப்...
விருதுநகர்
போலீஸ்காரரிடம், பெண் குரலில் பேசி மயக்கி ஏமாற்றியதால் கல்லூரி மாணவரை வெட்டிக் கொலை செய்த மூவரில் இருவர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான போலீஸ்காரரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ளது வ.புதுப்பட்டி. இங்குள்ள கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்த தெற்குமலை என்பவருடைய மகன் ஐயனார் (25). பட்டதாரியான இவர் விருதுநகர் அருகிலுள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
அதேப் பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பவருடைய மகன் கண்ணன் என்கிற குமார் (26). இவர் சென்னை எண்ணூரில் காவலாளராக பணியாற்றுகிறார்.
குமாரின் செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்ட ஐயனார் அவரிடம் பெண் குரலில் பேசியுள்ளார். இதில், மயங்கிய குமார், ஐயனாரை பெண் என்று நினைத்தே பேசி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் குமார் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது, தன்னிடம் பெண்போல பேசி ஏமாற்றியது ஐயனார் தான் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஏமாற்றத்தை குமாரால் தாங்கிக்கொள்ள முடியாததால் கடந்த வாரம் விஷம் குடித்து, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது, அவரை பார்க்க வந்த உறவினர்கள் விஷம் குடித்ததற்கான காரணத்தைக் கேட்டனர். அப்போது ஐயனார், தன்னை நம்பவைத்து அவமானப்படுத்திவிட்டதாக கூறினார் குமார்.
இதனைத் தொடர்ந்து ஐயனாரை கொலை செய்ய குமாரும், அவரைச் சார்ந்தவர்களும் முடிவு எடுத்தனர்.
இந்த நிலையில் குமாரின் தம்பி விஜயகுமார் (21), டான்சி என்கிற தமிழரசன் (27), மற்றொரு தமிழரசன் (23) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவு ஐயனாரிடம் சென்று குமார் அழைத்து வரச் சொன்னதாக கூறியுள்ளனர்.
அப்போது ஐயனாரும், அவர்களுடன் போதர் கண்மாய் அருகேயுள்ள தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த குமாரும், மற்ற மூவரும் சேர்ந்து அரிவாளால் ஐயனாரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். பின்பு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ஜஸ்டின் பிரபாகரன் விசாரணை நடத்தி, விஜயகுமார், டான்சி என்கிற தமிழரசன், மற்றொரு தமிழரசன் ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான முக்கிய குற்றவாளியான காவலர் குமாரை, காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.