மெரினாவில் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தியவர்கள் அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுச்சியுடன் திரண்ட இளைஞர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். லட்சக்கணக்கில் இருந்த போராட்டக்காரர்கள் நேற்றிரவு முதல் கலிய துவங்கினர். 

மத்திய மாநில அரசுகள் இணைந்து அவசர சட்டத்தை கொண்டு வந்த நிலையிலும் கலையாமல் பிடிவாதத்துடன் இருந்த போராட்டக்காரர்களுக்கு பல மட்டத்திலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று நேற்று இரவு ஹிப் ஹாப் ஆதி , சேனாதிபதி , ராஜேஷ் ,ராஜசேகர் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கைவிட்டனர். ஆனாலும் கூட்டம் கலையவில்லை.

உண்மையான இளைஞர்களிடையே பல அமைப்புகள் கலந்துவிட்டன ஆகையால் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுங்கள் மற்றவர்கள் பற்றி நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்றிரவு முதல் விடிய விடிய பலர் கலைந்து செல்ல துவங்கினர். விடியற்காலையில் கமிஷனர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. போராட்டத்தை நடத்திய அனைவரையும் பாராட்டியுள்ள காவல்துறை, எவ்வாறு அமைதியாக போராட்டம் நடத்தினீர்களோ அவ்வளவு அமைதியுடன் கலைந்து செல்லுங்கள் என்று கூறப்பட்டிருந்து.

இதை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் படித்தார். பின்னர் அனைவரையும் கலைந்து செல்லும்படி கேட்டு கொண்டார். இடை கேட்டு பெரும்பாலானவர்கள் கலைந்து சென்றனர். பலர் கலையாமல் கடலைநோக்கி சென்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக நொச்சிக்குப்பம் மீனவர்களும் கலந்துகொண்டனர். சுமார் 3 ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்துபவர்கள் கலைய மறுத்து போராடி வருகின்றனர் .

இவர்களுக்கு ஆதரவாக நொச்சிக்குப்பம், மாட்டாங்குப்பம், நடுக்குப்பம் பகுதி மீனவர்கள் இறங்கியுள்ளதால் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை போலீசார் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.