Strong People Fight Against Opening liquor Shop

திருவாரூர்

திருவாரூரில் மூடப்படும் என்று உறுதியளித்த சாராயக் கடை திறக்கப்பட்டதால் கடுப்பான மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முறையும் சாராயக் கடை மூடப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள வாட்டார் கடைவீதியில் அரசு சாராயக் கடை ஒன்று உள்ளது. இந்த சாராயக் கடையினால் பெண்கள், மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

எனவே, இந்த சாராயக் கடையினை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி தெற்கு வாட்டார், செல்லத்தூர், வழச்சேரி, புத்தூர், திருவாசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த மாதம் சாராயக் கடை முன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை காவலாளர்கள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சாராயக் கடையினை திறப்பதற்கு டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சாராயக் கடையினை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகேசன், திமுக நிர்வாகி தங்கராசு, அதிமுக நிர்வாகி குஞ்சுப்பிள்ளை மற்றும் பலர் பங்கேற்றனர்.

பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் சுப்ரியா, திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மண்டல துணை மேலாளர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டமும் கைவிடப்பட்டது.