இலங்கை அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து போராட்டம்…
தமிழக மீனவர்கள் மீது ஏழு லட்சம் முதல் ஏழு கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்க இலங்கை அரசின் சட்டத்தை எதிர்த்து இராமேசுவரத்தில் வைகோ தலைமையில் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மீன் பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, சிங்களக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறையில் அடைக்கின்றார்கள்; படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.
இலங்கை அரசு ஒரு புதிய சட்டத்தை, 2017 ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கின்றது. அதன்படி, தமிழக மீனவர்கள் மீது ஏழு லட்சம் முதல் ஏழு கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்திருக்கிறது.
தூதரக உறவுகள் மூலமாக இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுத்து, இந்தச் சட்டம் நிறைவேற விடாமல் தடுக்க வேண்டும் என்று நேற்று மோடியை நேரில் சந்தித்து வைகோ கூறினார்.
மேலும், இந்த சட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து இராமேசுவரத்தில் வைகோ தலைமையில் இன்று போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் கட்சியைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள், மீன்வர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.