லாரிகளில் தண்ணீர் திருடுவதை தடுத்து நிறுத்துங்கள் - 80 பெண்கள் ஆட்சியரிடம் முறையீடு...
திண்டுக்கல்
லாரிகளில் தண்ணீர் திருடப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி பல்வேறு பகுதிகளை சேர்ந்த 80 பெண்கள் திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளித்து முறையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று மனுக்களை கொடுத்தனர்.
அதன்படி, திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக் கன்பட்டி, கள்ளிப்பட்டி, ஆலக்குவார்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் சுமார் 80 பேர் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்ற காவலாளர்கள் தடுத்து நிறுத்தி, சிலரை மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனர்.
இதனையடுத்து அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமங்களில் அமைந்துள்ள 13 கிணறுகளில் இருந்து சிலர் லாரிகள் மூலம் தண்ணீரை திருடி விற்பனை செய்கின்றனர்.
இரவு, பகலாக லாரிகளில் தண்ணீர் திருடும் சம்பவம் நடந்து வருகிறது. ஆனால், எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரியும், தண்ணீர் திருட்டை தடுக்க வலியுறுத்தியும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் லாரிகளில் தண்ணீர் திருடுவதை தடுத்து, தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.