stalin inspects kosasthalaiyar river dam

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு 4 தடுப்பணைகள் கட்டி வரும் நிலையில் தமிழக விவசாயிகளை பாதிக்கும் அந்த இடத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேலூரை அடுத்த பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப்பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கிளை நதியான குசா ஆற்றில் 4 இடங்களில் ஆந்திர பொதுப்பணித் துறையினர் தடுப்பணைகள் கட்டும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதனால், தமிழக எல்லையில் உள்ள வெளியகரம் பெரிய ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் தடைபடும் அபாயமும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர அரசை கண்டித்து கடந்த7 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தடுப்பணை கட்டும் பணிகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.
இதைத்தொடர்ந்து சந்திர நாயுடு உத்தரவின் பேரில், சித்தூர் மாவட்ட பொதுப்பணி மற்றும் நீர்பாசனத்துறை அதிகாரிகள் குழுவினர், ஏரிக் கால்வாயில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், தமிழக விவசாயிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2 அடி உயரத்தில் தடுப்பணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இருக்காது என அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசால் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார். தோடர்ந்து அப்பகுதி விவசாயிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.