ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், , ஒன்றிய அரசின் தமிழக வஞ்சிப்புக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டங்கள் குறித்தும், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் இலக்கு குறித்தும் அவர் பேசியுள்ளார்.

பாசத்திற்கு கடமைப்பட்டிருக்கிறேன்

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு, மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் கண்டன பொதுக்கூட்டம் இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகக் கழக அரசு இருப்பதால், மாணவிகள் பலரும் திட்டங்களின் பெயர்களைச் சொல்லி, “இவையெல்லாம் எங்களுக்கு ரொம்பவும் பலன் தருகிறது” என்று தெரிவித்ததைக் கேட்டதைவிட, உங்களில் ஒருவனான எனக்கு வேறு என்ன பேறு வேண்டும்? “அப்பா.. அப்பா..” என்று மாணவிகள் காட்டிய பாசத்தின்போது, அவர்களுக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம்தான் கழக ஆட்சியின் ஒரே இலட்சியம் என்ற மன உறுதியையும் பெற்றேன்.


தேர்தலை புறக்கணித்த அதிமுக, பாஜக

நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணம் என்பது இருட்டுக்கடை அல்வாவின் இனிய சுவையாக நெஞ்சில் இனித்த வேளையில்தான், பிப்ரவரி 8ஆம் நாள் காலை முதலே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலிருந்து இனிப்பான வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்தது. முதல் சுற்றில் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும்வரை எல்லாச் சுற்றுகளிலும் கழக வேட்பாளர் சந்திரகுமார் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டே இருந்தார். இந்த இடைத்தேர்தல் களத்தைச் சட்டமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிற பா.ஜ.க.வும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் தி.மு.க.வை எதிர்த்தன.

கைக்கூலிகளுக்கு டெபாசிட் இழப்பு

மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், மகத்தான தலைவர் தந்தை பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இது என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். உங்களில் ஒருவனான நான் நேரடியாகச் சென்று பிரசாரம் செய்யவில்லை என்றாலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு, கழக வேட்பாளரை ஆதரிக்குமாறு வாக்களார்களுக்குக் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன்.

மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நேரடிப் பிரசாரத்துக்கு வர இயலாதபோதும், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, தி.மு.கழக வேட்பாளரை 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிர்த்து நின்ற மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்திருக்கிறார்கள்.

200 தொகுதி என்பது இலக்கு

2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், ‘வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்தை உங்களில் ஒருவனான நான் முன்வைத்தேன். ‘இருநூறு இலக்கு’ என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது இடைத்தேர்தல் கண்ட ஈரோடு கிழக்கு. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் திராவிட மாடல் அரசு, ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் கெடுக்கும் வகையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தன் வஞ்சகப் போக்கைத் தொடர்ந்து மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டினேன். உங்களில் ஒருவனான நான் என்ன உணர்வுடன் ஆவடிப் பொதுக்கூட்டத்தில் பேசினேனோ, அதே உணர்வுடன் தமிழ்நாடு முழுவதும் கழக மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கழகத்தினர் பேசிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

அமைதியை கெடுக்கும் வேலையில் பாஜக

ஒன்றிய பா.ஜ.க அரசிடம் நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று நெல்லையில் நடந்த விழாவில் நான் சுட்டிக்காட்டியதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் புள்ளிவிவரங்களுடன் நம்முடைய கழகத்தினர் உரையாற்றியிருக்கிறார்கள். இது வெறும் கண்டனக் கூட்டமாக முடிந்துவிடாமல், நல்லாட்சி தரும் திராவிட மாடல் அரசை முடக்குவதாக நினைத்து தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதையும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றிபெற முடியாது என்பதால் அமைதியைக் கெடுக்கும் வேலைகளைத் தூண்டி விடுவதையும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்து, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் நல்லிணக்க நிலமாக தமிழ்நாடு என்றும் தொடரவேண்டும் என்கிற உறுதியை ஏற்கக்கூடிய வகையிலே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் தி.மு.கழக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.