சென்னையில் ஸ்டாலின் கைது; நாகையில் திமுகவினர் சாலை மறியல் - 50 பேர் கைது...
நாகப்பட்டினம்
சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 50 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை காவலாளர்கள் கைது செய்ததைத் தொடர்ந்து அதனைக் கண்டித்து நேற்று நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நீதிமன்றம் முன்பு நாகை மாவட்ட தி.மு.க.வினர் நடத்திய இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில், "தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து" முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவபிரகாசம் மற்றும் காவலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.